வாங்க ஊருக்கு ...

1 Comments »

லகின் மிகப் பெரும் மக்கள் மீட்பு நடவடிக்கை முடிந்து பொங்கிப் பூரித்து நிற்கிறது என் நாடு . ஐந்து மாதத்தில் குறைந்தது 35000 மக்களைக் கொன்று புதைத்த மயான பூமியில் நின்று மாட்சிமை பொருந்திய ஜனாதிபதி ..வாங்க எல்லோரும் ஊருக்கு ..."வடக்கின் வசந்தம் " அழைக்கிறது .

கொத்துக் கொண்டுகளினாலும் ,பொஸ்பரஸ் குண்டின் சூட்டோடு காத்திருக்கிறது என் மண் ..காய்ந்து கருகிப் போன மரங்களும் ,கந்தக நொடி வீசும் காற்றும் உங்களை வரவேற்கும் . குருதி நனைந்து இறுகிய காணி நிலமெல்லாம் உங்கள் காலடி பட்டு அகலிகை விமோசனம் கிடைக்கட்டும் . கையினால் மண் வாரி குழிதோண்டி புதைத்த உடலங்களின் எலும்புகள் சிறு மழைக்கு நிமிர்ந்து நின்றால் அச்சம் வேண்டாம் ..அட இது என் உறவுக்காரன் தான் என்று சொல்லும் உறுதியோடு வாங்க ..


யுரோசிமாவில் அணுகுண்டு வீழ்ந்த இடத்தில் இன்னும் புல்லுக் கூட வளரவில்லையாம் ... இனி பெயரை மட்டுமே மாற்றி சொல்வோம் என் வீடு தோட்டத்திலும் எதுவும் முளைக்கவில்லை என்று பெருமையாய் ..மனித எச்சங்கள் வாழ்ந்த அடையாளம் சொல்லி தன் சுடுபட்ட உடம்போடு காத்திருக்கிறாள் அகிலம் காக்கும் ஆதிபராசக்தி உங்கள் சந்தனக் காப்புக்கு .. ஒன்று இரண்டு இருந்தால் ஆப்கானிஸ்தான் புத்தர் சிலை போல காட்சிக்கு வைக்கலாம் , நீங்களோ தெருவுக்கு தெருவல்லவா கோயில் கட்டி வைத்து இருக்கிறீர்கள் ..

குடியேற்ற திட்டம் எதுவும் இப்போது இல்லை ..இருங்கள்! சிங்கள சின்னங்கள் ,பெயர் பலகைகள் முதலில் வைக்க வேண்டும் நாம் .. பண்டார வன்னியன் அரண்மனை நிலம் எம் சிங்கள பூமி ,விகாரை ஒன்று கட்ட பூஜை போட வேண்டும் வெற்றி விழாக் கொண்டாட்டங்களில் பிக்குகள் இருப்பதால் ,நேரம் குறிக்கவில்லை இன்னும் ..... இருக்கவே இருக்குது மாவீரர் துயிலுமில்லக் கருங்கற்கள் எமக்கு ..

ஒரு நாடு இன்னொடு நாட்டின் மீது படையெடுத்த வெற்றிக் களிப்பில் இருக்கிறோம் நாம் ..ஏய் அங்கென்ன முணுமுணுப்பு..கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாய் பொத்தி வாழப் பழகு ..இனி யாரும் சத்தம் போட்டு பேசவோ,நாலு பேர் கூடி நிற்கவோ கூடாது ,இல்லை கண்டதும் சுட்டுத் தள்ளு தான் .. கவலை வேண்டாம் உங்களைக் காப்பதை தவிர வேறென்ன வேலை எமக்கு ... உலக நாடுகள் தந்த ஆயுதங்கள் சும்மா போட்டு வைக்கவா ? 'ஒன்னுக்கு' போவதுக்கு கூட அனுமதி வாங்கிச் செல்லுங்கள் .. இதுவும் உங்கள் பாதுகாப்பிற்கு தான் .


இனி சந்துக்கு சந்து எம் துப்பாக்கிகள் குறி பார்க்கும் உம்மை .. கவலை வேண்டாம் பயக்கரவாதி பயமற்று நீங்கள் நிலாச்சோறு சாப்பிடலாம் ..என்ன அவ்வப்போது சிகரெட் புகைக்கு உன் அடுப்படி நெருப்பும் ,குடித்து வெறிக்க உங்கள் "கற்பகதரு" கள்ளும் ,தொட்டுக்கொள்ள உன் தமிழ் பெண்ணும் வேண்டும் எமக்கு ..அவ்வளவு தான் .

விசாரணைக்கு என்று அழைப்போம் .வீடு புகுந்து உதைப்போம், கேட்க நாதியற்ற தமிழன் நீ ! கொஞ்சம் வலிமையாய் இருந்த போதே சொன்னோம் ,இது சிங்கள பூமி ஓடுங்கள் வேறு நாட்டுக்கு என்று ,இனி யாரும் சத்தமாய் மூச்சுக்கூட விடக் கூடாது.காந்தி பொம்பை போல் புலன்களை அடக்கக் கற்றுக் கொண்டு வாருங்கள் ..எது நடந்தாலும் ஜடமாய் வாழ வேண்டும் நீங்கள்.

காட்டிக் குடுக்க நாய்களும் ,சேர்ந்து ஓத வாய்களும் இருக்கும் போது இனி கரு கொண்ட குழந்தை கூட சுகந்திர நினைப்பு வரக்கூடாது .A9 பாதை திறப்போம் , யாழ்தேவியும் ஊர் வர வழி செய்வோம் , கூடவே சிங்கள காவலிகளும் காவலுக்கு வருவார்கள் . கலாச்சாரம் ,பண்பாடு என நிறைய கதைக்கிறீர்கள் ... இனி குட்டைப் பாவாடை பெண்ணுடன் பியர் போத்திலுடன் டிஸ்கொத்தே போக தடையில்லை ,கள்ளுக் கடைகள் வீதிக்கு வீதி திறக்கலாம் ..

சமத்துவம் நிறைய கதைத்தீர்கள் போல் முன்பு ... சாதி பெருமை சத்தமாய் பேசலாம் இனி ."நாவிதன் ","டோபி" எல்லோரையும் வீடுக்கு வர சொல்லி சேவகம் செய்ய சொல்லலாம் ..கீழ் சாதியை சரி சமனாய் பார்ப்பதா ? வாருங்கள் தமிழர்களே இவை எல்லாம் உங்களுக்காகத்தான் ..

கெட்டு சீரழிந்து கலப்பு இனம் உருவாக்க வாருங்கள் இளைய தலைமுறையே .. ,விடுதலை எண்ணம் துளியும் வராமல் பார்த்துக் கொள்ள நாங்கள் தயார் .


கேட்க ஆள் இருந்த போதே சொன்னோம் எம் வீரர்களுக்கு
" தமிழ் பெண்கள் உங்களுக்கு ,ஆண்கள் கடலுக்கு " என்று ..இனி ஒரு இராணுவ வீரன் ஒரு நாளுக்கு எத்தனை தமிழ் பெண்ணை தொட்டான் என புள்ளி விபரம் சேகரிக்கப் போகிறோம் .ஒரு கிருஷாந்திக்காக ஒலம் போட்ட உங்கள் வாய்கள் இனி எத்தனை தடவை திறக்கப் போகின்றன பார்க்கலாம் ?காணமல் போனவரை இனி தேட வேண்டியது இல்லை ,நேரே எம்மிடம் வாருங்கள் ..எந்த எந்த மலசல குழிகள் ,எந்தக் கிணறுகள் என நாமே காட்டுகிறோம் ,முடிந்தால் அடையாளம் கண்டு சொல்லிச் செல்லுங்கள் .

உன் பக்கத்து வீடுக்கு நாளை சிங்கள குடும்பங்கள் வரும் ..சேவகம் செய்து வாழப் பழகு .. கல்விக் கூடங்கள் ,அலுவலகங்கள் எல்லாம் எம்மவருக்கு ஒதுக்கி விட்டு ,கொஞ்சமாய் பிச்சை போடுவோம் .. சத்தம் போடமால் வங்கிக் கொள்.. இனி மேலும் விழுக்காடு புள்ளி விபரம் எல்லாம் சொல்லித் திரியாதே ...பெருபாண்மை ,சிறுபான்மை இனம் பற்றி எல்லாம் மறைவாய் பேசலாம் .. கொடுப்பதை வங்கிக் கொண்டு அடிமைகளாக இல்லை! இல்லை! ஒரே நாட்டின் சக குடிமகனாக வாழ வாருங்கள்!வரவேற்கிறது.


" வடக்கின் வசந்தம் ", ஒரு நிமிடம்! இத்தனையையும் பொறுத்துக் கொண்டு வாழ தயார் என்றால் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லி விட்டு வரலாம் ...
உம் பெயர் என்ன ?
" என்ன பிணமா?" ......... ஓ தமிழனா ..... ?


பின்குறிப்பு : இங்கு வருபவர்கள் கட்டாயம் சிங்களம் தெரிந்து கொண்டு , தமிழ் இன அடையாளங்களை ஒதுக்கி ,புலன்களை அடக்கி வந்தால் இன்னும் செளகரியம் ..

1 Response to "வாங்க ஊருக்கு ..."

thillaiarul Says :
March 30, 2012 at 9:09 AM

எத்தனையோ தமிழ் நெஞ்சங்கள் ... இப்பவும் ஈரத்துடன் தான் இருக்கிறதா என்று ஒரு சந்தேகம்....
அவரவர் பிழைப்புக்கு எதை எதையோ வைத்து பிழைக்கிறார்கள்... சிலர் ... கடவுளை ...
சிலர் ... கடவுள் இல்லை என்று.... சிலர் சினிமா... சிலர் சதை ...சிலர் கதை...
சிலர் உதை.... சிலர் அரசியல்... வெகு சிலரில் ஒரு மாபெரும் தலை மட்டுமே
தமிழகத்தில் முதலை கண்ணீர் வடித்து ஈழமக்களின் திறத்தில் குளிர் காய்ந்து பிழைப்பு நடத்தியது....
ஒரு ஈழ தமிழ் நெஞ்சத்தின் வேதனை பதிவை அவசியம் வாசியுங்கள்.....

Post a Comment