" தாகம் "

2 Comments »
'எப்போதும் உனக்கு அவசரம் தான்.நின்று ஒரு வாய் சாப்பிட்டுப் போயேன்'என்னும் அம்மாவின் வார்த்தைகள் காதில் தேய்ந்து ஒலித்தது.
அவாவுக்கு என்ன தெரியும்...ஒவ்வொரு நாளும் இந்த பேரூந்தில போய் வந்தா இப்படி சொல்லிக் கொண்டிருக்க மாட்டா என புறுபுறுத்தபடி பேரூந்து நிறுத்தம் நோக்கி ஒட்டமும் நடையுமாகி விரைந்தேன்.

'29சி போயிருச்சா ?' என பக்கத்தில் நின்றவரிடம் விசாரித்துக் கொண்டு மணி பர்த்தால்..."ஐயோ...... நேரம் போகுதே... பேரூந்து இன்னும் வந்தபாடு இல்லை..இனி அதில இடம் பிடித்து போய் சேர்வதிற்குள் உயிர் போய் விடும்.."என பக்கத்துப் பொண்ணும் புலம்ப தொடங்க பேரூந்து வந்தது சேர்ந்தது.

கூட்டம் கொஞ்சம் அதிகம் ,இன்றைக்கு இடம் கிடைச்ச மாதிரி தான்......ஒருமாதிரி உள்ளே ஏறியாச்சு..என் நிறுத்தம் போய்ச்சேர எப்படியும் 1.30 மணித்தியாலத்திற்கும் மேலாகும் .எப்படியாவது ஒரு சீட் கிடைச்சா போதும் என நினைத்துக்கொண்டு உள்ளே பார்த்தால் நிரம்பி வழிகிறது..பஸ் நகர நின்று கொண்டே பயணத்தில் பல பேருடன் நானும். பசி வேற...கொஞ்சமாவது சாப்பிட்டு வந்திருக்கலாம்.ம்ம்ம்..கூட்ட நெரிசல் வேற..


எரிச்சல் ,வெறுப்பு,கோபம் என்ன எல்லாம் சேர்ந்து கலந்து இருக்கிறது..அலுவலகம் போய் யார் மேலேயோ எரிந்து விழப்போறேனோ தெரியாது.... சிறிது நேரத்தில் ஒரு இடம் கிடைக்க கொஞ்சம் ரிலாக்ஸாக முடிந்தது..ஜன்னல் ஓர காட்சிகள் எப்போதும் என் கண்களுக்கு சுவாரசியமானது,ஆனால் இன்று மனம் எதையும் ரசிக்கும் நிலையில் இல்லை.

கூட்டம் குறைய தொடங்கியது.. .ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் நிலைத்திருந்தபடி....சிலர் பத்திரிகைகளுடனும்,சிலர் கைபேசியில் பேசியபடி,பாட்டு கேட்டபடி...என.நானும் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிக்க,பசி வயிற்றை குடைந்தது.புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன்.ஒருமாதிரிஎன் நிறுத்தம் வர இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

போகும் வழியில் ஒரு குளிர்பானக்கடை..என் பசியை இப்போதைக்கு தணிக்க இதை விட்டால் வேறு வழியில்லை.மதியம் சாப்பாடு இரண்டுக்கு மேல் ஆகும்.வெளியில் நின்றபடியே ஒரு பழச்சாறுக்கு சொல்லிவிட்டு ,என் கைபேசியை நோண்டிக்கொண்டிருக்கையில், "பாப்பா" என்னும் குரல் தலையை நிமிர்த்திப் பார்க்க செய்தது.. தன் முதுமையின் வடுக்களை தோலில் தொலைத்துவிட்ட,ஏழ்மையின் அடையாளங்களோடு ஒரு பாட்டி..'பாப்பா ஒரு ரஷனா' வாங்கிக்கொடு...பாப்பா.. என.

பரிதாபத்தோடு தலையாட முன்பே..எங்கிருந்துதான் ஒரு சாத்தான் மனதிற்குள் புகுந்தாதோ,'எதாவது வாங்கிக் கொடு என்று கேட்டால் கூட பரவயில்லை....அவாவுக்கு ரஷனா வேணுமாம்..' என புத்தியில் ஓட..,கை சில்லரையை தேட தொடங்கியது.."ஏய் கிழவி உன்னை எத்தனை தடவை சொல்லுறது இங்க நிற்காதே ....காலங்காத்தால வந்து கழுத்தறுக்கிறீயே ஒடிப்போ இங்கேயிருந்து.. என்னும் அதட்டலில்..நகர்ந்து மறைந்து போனார் அந்த பாட்டி.

அவருக்காக தேடிய சில்லரை கையில் கனக்க, குடித்த குளிர்பானம், சுடுதண்ணீராய் வயிற்றுக்குள் கொதிக்க தொடங்கியது..ஒவ்வொரு நாளும் அந்த பகுதியில் என் கண்கள் அந்த வயதான பாட்டியை தேடும்..'பிஸா'வுக்கும் 'பர்க்கர்'ருக்கும் கடையில் நிற்கையில் இப்போதும் என் காதுகளில் "பாப்பா ஒரு ரஷனா வாங்கிக் கொடு" எனக் கேட்டபடி.......

2 Responses to "" தாகம் ""

Unknown Says :
August 25, 2008 at 12:07 PM

அருமையான கதை. வாழ்வின் பழகிய பக்கங்களிலிருந்து எடுத்தெழுதும்போது கதை அழகாக நிமிர்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள் ஸ்னேகிதி !

Sakthy Says :
September 18, 2008 at 12:04 AM

நன்றிகள் ரிஷான் ..
இந்தக் கதை என் குருவுக்கு சமர்ப்பணம் .. ;)
சரிதானே ....

Post a Comment